
இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன்.
வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம்,
கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது. இந்த சூழலில், கிளிநொச்சிக்குள் சென்று களம் கண்டு வந்துள்ளனர் சந்திரகாந்தனும் மற்றொரு எம்.பி. ஜெயானந்தமூர்த்தியும். பிரபாகரனையும் இவர்கள் சந்தித்ததாய் வந்துள்ள தகவல்களை அறிந்து, சந்திரகாந்தனை தொடர்பு கொண்டோம். அவர், நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

வன்னிப் பெருநிலப்பரப்பில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
தமிழினத்தை அழிக்கும் அகோரத் தாக்குதலை நடத்தி வருகிறது சிங்கள ராணுவம். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, வடகிழக்கில் உள்ளவர்கள் (தமிழர்கள்) எல்லாம் பயங்கரவாதிகள், மற்றவர்கள் எல்லாம் யுத்த ஜீவிகள் என்கிற மனோ நிலையில், ஒரு இனத்தை அழிக்கும் போரை நடத்துகிறார்.
நாங்கள் கண்ணால் பார்த்தோம். தமிழர்களின் வாழ்விடங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி பாடசாலைகள், மருத்துவக் கூடங்கள், வியாபார ஸ்தலங்கள் என அனைத்தும் மூர்க்கத்தனமாக அழிக்கப்பட்டுள்ளன. குண்டுவீச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள காடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் மக்கள். மரங்களுக்கிடையே டெண்ட் போட்டு தங்கியுள்ளனர்.
உணவு இல்லை, மாற்று உடை இல்லை, மருந்து கிடையாது, ஏன் குடிக்க தண்ணீர் கூட இல்லை. குண்டுவீச்சில் நஞ்சாக மாறிக் கிடக்கிறதய்யா... குளம், குட்டைகள் எல்லாம். வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, கடும் காய்ச்சல் என சொல்லொணா துயரத்தில் தவிக்கின்றன பச்சிளங் குழந்தைகள். விஷ ஜந்துக்களோடுதான் வாழ வேண்டியதிருக்கிறது.
அழக் கூட நேரமில்லாமல், சிங்கள ராணுவத்தின் தாக்குதலில் செத்து மடியும் தங்கள் உறவுகளை, குழந்தைகளை அவசர கதியில் புதைத்து விட்டு பாதுகாப்பு தேடி ஓடிக் கொண் டேயிருக்கின்றனர் எமது மக்கள். எங்கு பார்த்தாலும் சோகமே சூழ்ந்திருக்கிறது. ஆனாலும், விரைவில் தீர்வு கிட்டும் என்கிற தன்னம்பிக்கை மட்டும் எமது மக்களிடம் ஆழமாக எதிரொலிக்கிறதய்யா.
"புலிகளின் முக்கிய பகுதியான பூநகரியைப் பிடித்துவிட்டோம். விரைவில் கிளிநொச்சியை வீழ்த்தி விடுவோம்'' என்கிறார் அதிபர் ராஜபக்சே. பூநகரி இழப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்? கிளிநொச்சியை வீழ்த்தி விட சாத்தியம் உண்டா?
ராஜபக்சே என்ன மாதிரியான கால்குலேட்டர் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதில் எந்த மாதிரி கணக்குகளைப் போட்டு, "கிளிநொச்சியை பிடித்து விடுவோம்' என்று சொல்கிறார் எனவும் புரியவில்லை. கிளிநொச்சியை வீழ்த்தி விடுவோம் என்று ஓராயிரம் முறை சொல்லிவிட்டார். ஒருமுறை கூட அது நிறைவேறவில்லை. புலிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது கிளிநொச்சி. இதனைப் பிடிப்பதற்காக, மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது ராணுவம். அதனை முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள்.
நான் நேரில் பார்த்த வரையில் வலிந்த தாக்குதலை (தற்காப்பு) மட்டுமே தற்போது நடத்துகின்றனர் புலிகள். இதற்கே தாக்குப் பிடிக்க முடியாமல்தான் திணறுகிறது ராணுவம். ஆனால், உக்கிரமான தாக்குதல், முன்னேறி விட்டது என்றெல்லாம் பரப்புரை செய்கிறது சிங்கள அரசு. உக்கிரமான தாக்குதலை நடத்துகிறார்கள், உண்மைதான். ஆனால், அவர்கள் முன்னேறவில்லை. கடந்த 2 மாதங் களில் இவர்கள் நடத்திய உக்கிரமான தாக்குதல்களுக்கு வெற்றி கிடைத்திருக்குமானால், ஒரு கிளிநொச்சி அல்ல, 10 கிளிநொச்சியை பிடித்திருக்க வேண்டுமே. ஏன் முடியவில்லை.
பூநகரி என்பது ஒரு ஆட்லெரிதளம். அங்கு போராளிகள் யாரும் இல்லை. சண்டையே நடக்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது ராணுவம். அவ்வளவுதான். மாவீரன் நெப்போலியன் வரலாற்றில் கூட தந்திரோபதாய நடவடிக்கையாக பின்வாங்குவதும், பின்னர் அதனை மீட்பதும் நடந்துள்ளது. அத்தகைய போர் யுக்தியாகத்தான் பூநகரியை புலிகள் விட்டுக் கொடுத்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம். எமது மக்களிடமும் இந்த சிந்தனையோட்டம்தான் உள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரனை நீங்கள் சந்தித்தாக செய்திகள். தற்போதைய கள சூழலில் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்?
கிளிநொச்சி மற்றும் தமிழ்ப் பிரதேசங்களுக்குள் போய் வந்தோம். அங்குள்ள கள நிலைமைகளை கண்டறிந்தோம். ஓமந்தை செக்-போஸ்ட்டினை கடந்து தான் நாங்கள் கிளிநொச்சிக்குள் போக வேண்டும். ஆனால், ஆர்மி எங்களைத் தடுத்தது. கெடுபிடி செய்தது. "நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்' என்று சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளக் கூட சிங்கள ராணுவத்தினர் தயாராக இல்லை. நாங்கள் உள்ளே செல்லவே போராட வேண்டியதிருந்தது. கேமரா, உடைமைகளை தடை செய்தனர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதாக இருந்தது. ஆனால், வாய்ப்பு அமையவில்லை. பிரபாகரனை அடிக்கடி சந்திக்கும் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் முக்கிய தளபதிகளை சந்தித்து நிலவரத்தையும் பிரபாகரன் மன நிலையையும் கேட்டோம். அப்போது அவர்கள் தற்போதைய களச்சூழல் எந்த வகையிலும் பிரபாகரனை சோர்வடைய வைக்கவில்லை. தன்னம்பிக்கையின் உச்சத்திலும் மன உறுதியுடன் திடமாகவும் இருக்கிறார். தந்திரங்கள், யுக்திகள் உள்ளிட்ட ராணுவம் தொடர்பான விவகாரங்களில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்.
அதே சமயம், தமிழீழத் தமிழர்களை கண் மூடித்தனமாக ராணுவம் படுகொலை செய்கிறதே என்கிற கவலையை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். கிளிநொச்சியை பாதுகாக்க சபதம் ஏற்றிருக்கிறார் பிரபாகரன் என்று சொன்னார்கள்.
ஆயுதங்களை கீழே போட்டால்தான் பேச்சுவார்த்தை என்கிறாரே ராஜபக்சே?
அறப்போராக துவங்கிய தமிழின சிக்கல்கள், ஆயுதப் போராட்டமாக உருமாறியதற்கு சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகள்தான் காரணம். தமிழர்களுக்கு சிங்களவனும் சிங்கள அரசும் பயப்படுவதில்லை. அவர்கள் கைகளில் உள்ள ஆயுதத்திற்குத்தான் பயப்படுகிறார்கள். ஆயுதங்கள் இருக்கும் போதே, தமிழர்களை கொன்றழிக்கும் ராஜபக்சே, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால்...?
தமிழர்களின் பாதுகாப்பே ஆயுதங்கள் தான். சிங்கள அரசை நம்பி ஆயுதங்களை கீழே போட ஒரு தமிழன் கூட ஒப்புக் கொள்ள மாட்டான்.
நன்றி: நக்கீரன்
No comments:
Post a Comment