
கிழக்குத் தேசியம் பேசிக் கொண்டு கருணா விடுதலைப் புலிகளிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது அந்த துரோகியை நம்பி
கிழக்கின் பல்கலைக்கழகப் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் சிலர், மற்றும் புலம் பெயர்ந்து நாடுகளில் வசித்து வந்த சிலரும் கருணாவுடன் இணைந்து கொண்டனர்.
அவ்வாறு இணைந்து கொண்டவர்களுள் பிரான்ஸில் இருந்து வந்து இணைந்து கொண்ட ஸ்ராலின் எனப்படும் ஞானம், அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து இணைந்து கொண்ட ரகு எனப்படும் நந்தகோபன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இவர்களில் ஞானம் பின்னர் பிள்ளையானின் ஆலோசகராகிவிட நந்தகோபாலன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்பட்ட போது அதன் தலைவரானார்.
இந்தக் காலப்பகுதியில் தான் கருணா இங்கிலாந்துக்குச் சென்றதும் போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதுமான சம்பவங்கள் இடம் பெற்றன.
கருணா அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இலங்கைக்குத் திரும்ப வருகிறபோது, கிழக்கைத் தாம் கைப்பற்றியது மட்டுமல்ல அங்கு தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்றது எனக்காட்ட வடக்கை கிழக்கிலிருந்து பிரித்து ஒரு தேர்தலை நடாத்தி பிள்ளையான் எனப்படுகின்ற சிவனேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சராகவும் ஆக்கி விட்டிருந்தது இலங்கை அரசு.
இந்தத் தேர்தல் காலம் பிள்ளையான் குழுவிற்கு ஒரு நெருக்கடியான காலகட்டமாக இருந்தது. வடக்கு கிழக்கைப் பிரித்தாயிற்று. புலிகளையும் கிழக்கிலிருந்து ஓரளவு அகற்றிய பின்னர்,, அரசாங்கம் சொன்னது போலவோ அல்லது இவர்கள் நினைத்தது போலவோ கிழக்கில் பாலாறோ தேனாறோ ஓடவில்லை. அம்பாறையிலோ திருமலையிலோ ஏன் மட்டக்களப்பிலோ கூட தமிழ் மக்களாகட்டும் அல்லது முஸ்லிம் மக்களாகட்டும் அவர்களுக்கு எந்த விதமான விமோசனமும் கிட்டவில்லை. அவர்களுடைய காணி அதிகாரம் பற்றிய பிரச்சினை பெரியளவில் கிளம்பியது.
கிழக்கின் பிரதிநிதிகளாக தம்மை உருவகித்துக் கொண்டவர்களுக்கு மக்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஈடு கொடுக்க முடியவி;ல்லை. இதன்போது தான் ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறியிருந்த அதன் ஆலோசகராக இருந்த விக்னேஸ்வரனுடைய தொடர்பு பிள்ளையானுக்கு ஏற்படுகிறது.
டக்ளஸின் தம்பி தயா வெளிநாட்டிலிருந்து வந்து ஈபி.டிபின் நிர்வாகம், வரவு செலவு, வியாபாரம் ஆகியவற்றை மெல்ல மெல்லக் கையேற்க அதன் பழைய உறுப்பினர்களதும் முக்கியஸ்தர்களாக இருந்தவர்களதும் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. அவ்வாறு முக்கியத்துவமிழந்த ஈபிடிபியை விட்டுக் கழன்றவர்கள் பலர். அவர்களில் விக்னேஸ்வரன் குறிப்பிடத்தக்கவர்.
இந்தக்காலப்பகுதியில்தான் விக்னேஸ்வரன் - பிள்ளையான் தொடர்பு வலுப்பட ஆரம்பிக்கிறது. பிள்ளையானுக்கு அவரது கட்சிக்கு இருந்த அரசியல் வெற்றிடத்தை விக்னேஸ்வரன் இட்டு நிரப்ப ஆரம்பிக்கிறார். அதுவரை கருணாவைப் போல கிழக்கின் அபிவிருத்திக்குத் தான் முதலிடம் என்று பேசி வந்த பிள்ளையான் அந்த அபிவிருத்தியில் ஒரு துரும்பளவேனும் செய்வதற்கு குறைந்த பட்சம் மாகாண சபைக்கான அதிகாரங்களாவது வேண்டும் என்று பேசத் தொடங்குகிறார்.
பிள்ளையானின் இந்தப் போக்கு மகிந்த அரசுக்கு உவப்பானதாகவிருக்கவில்லை. இதேகாலப்பகுதியில் இந்திய அரசியல் தலைவர்களுடனும் அவர்களை இயக்கும் பின் புலங்களுடனும் பிள்ளையான் நெருங்க முயற்சிக்கும் தகவல்கள் மகிந்த அரசுக்கு இன்னும் தலையிடியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக
மீண்டும் மகிந்த அரசால் களமிறக்கப்பட்ட கருணா மாகாணசபைக்கு அதிகாரங்கள் தேவையில்லை எனவும், காவற்துறை அதிகாரம் கூட மாகாணசபைக்கு அவசியமற்றதெனவும் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிறிலங்காவின் காவற்துறைப்; படையில் இணைக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையிடுகிறார். அது மட்டுமல்லாமல் கட்சியினது பெயரையும் சின்னத்தினையும் மாற்றப் போவதாகவும் தெரிவிக்கிறார்.இந்த மோதல் படிப்படியாக விரிவடைய கட்சியின் பெயரைப் பதிவு செய்த குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவிக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானாவோ கருணாவை கட்சியிலிருந்தே இடைநிறுத்தியதாக அறிவிக்கிறார். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல புலிகளிலிருந்து கருணாவை உடைத்து தமிழ் மக்களின் அரசியலதிகாரக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தி விடலாம் என்று நினைத்தபோது உடைந்து வந்த பிள்ளையான் குழுவோ மீண்டும் மாகாணசபைக்கான அதிகாரங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறது.
இது மகிந்த அரசாங்கத்திற்கு எரிச்சலைக் கிளப்பி விட்டுள்ளது.
மகிந்தவின் தந்திரோபாயங்களுள் ஒன்று புலிகளிலிருந்து உடைந்து வந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கையாள்வது. மகிந்தவுக்கு கருணாவுடனும் தொடர்பிருக்கிறது. பிள்ளையானுடனும் தொடர்பிருக்கிறது. இனியபாரதியுடனும் தொடர்பிருக்கிறது. ஆனால் கருணாவின் கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் யாரும் இல்லை.
பிள்ளையான் தரப்பிலிருந்து எழுந்த மாகாணங்களுக்கான அதிகாரக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தத் தான் கருணா அவசரஅவசரமாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். கருணா விசுவாசிகளோ வேறெவருமோ நம்புவது போல கிழக்கு அபிவிருத்திக்காகவல்ல. அதன் நன்றிக்கடனாக கருணா மாகாண அதிகாரமே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார்.
ஆக, பிள்ளையான் குழுவைப் பலவீனப்படுத்துவதும் கருணாவைப் பலப்படுத்துவதும் மட்டுமே இப்போதைக்கு மகிந்த அரசுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்க உள்ளஒரே வழி.
அதற்கு முதல்படியாக புலனாய்வுத் துறை ஊடகங்களுடாக ஒரு செய்தியைக் கசிய விட்டது. விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுள் ஊடுருவி விட்டார்கள். ஊடுருவியது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் அவர்கள் கொழும்பு வரை வந்து செல்கிறார்கள். இது பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று.
அதன் அடுத்த கட்டமாக இன்று குமாரசாமி நந்தகோபன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்று பிரச்சாரப்படுத்தி விடலாம். உறுப்பினர்கள் மத்தியில் கருணாவை எதிர்ப்போருக்கு அதாவது மாகாண சபை அதிகாரங்கள் என்று பேசுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக்கி விடலாம். ஓரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.
ஆக மொத்தத்தில், இந்த கொலைகளின் பின்னனியில் அரசாங்கமே உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகின்ற போதும் , பிரதேசவாதம் பேசி புலிகள் இயக்கத்தை உடைத்து, மகிந்தவின் கைகளை ஓங்க வைக்கும் கருணாவிற்கும் நந்தகோபன் நிலைதான் வரும். அரசாங்கத்தின் சொல்கேட்டு ஆடாமல் , கூடுதல் அதிகாரம் மாகாண சபைக்கு தேவை என்றால் இதே கெதிதான் பிள்ளையானுக்கும் என்பதை மகிந்த BROS நிறுவனம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்..
No comments:
Post a Comment